நேரு கண்ணதாசன்

ஆசியாவின் ஜோதி மறைந்த போது கவியரசு உதிர்த்த கவிதை

 

 

சீரிய நெற்றி எங்கே

சிவந்தநல் இதழ்கள் எங்கே

கூரிய விழிகள் எங்கே

குறுநகை போன தெங்கே

நேரிய பார்வை எங்கே

நிமிர்ந்தநன் நடைதா னெங்கே?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்

அண்ணலைத் தீயிலிட்டார்

அன்னையைத் தீயிலிட்டார்

பிள்ளையைத் தீயிலிட்டார்

தீயவை நினையா நெஞ்சைத்

தீயிலே எரியவிட்டார்

தீயசொல் சொல்லா வாயைத்

தீயிலே கருகவிட்டார்!

வேறு

 

பச்சைக் குழந்தை

பாலுக்குத் தவித்திருக்க

பெற்றவளை அந்தப்

பெருமான்அழைத்துவிட்டான்

வானத்தில் வல்லூறு

வட்டமிடும் வேளையிலே

சேங்க்கிளியைக் கலங்கவிட்டுத்

தாய்க்கிளிளைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்

சாவுவந்து சேராதோ!

சஞ்சலமே நீயுமொரு

சஞ்சலத்தைக் காணாயே!

தீயே உனக்கொருநாள்

தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும்நாம்

தேம்பி அழ வையோமோ!

யாரிடத்துப் போயுரைப்போம்!

யார்மொழியல் அதைதிகொள்வோம்?

யார்துணையில் வாழ்ந்திருப்போம்?

யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த

வேதனே எம்மையும் நீ

ஊரோடு கொண்டுசென்றால்

உயிர்வாதை எம்கில்லையே

நீரோடும் கண்களுக்கு

நம்மதியை பார்தருவார்?

நேருஇல்லா பாரதத்தை

நினைவில்யார் வைத்திருப்பார்?

ஐயையோ! காலமே!

ஆண்டவனே! எங்கள்துயர்

ஆறாதே ஆறாதே

அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்

கண்மூட வைத்தாயே

கண்கொடுத்த காவலனைக்

கண்மூட வைத்தாயே

கண்டதெல்லாம் உண்மையா

கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா

கற்பனையா அம்மம்மா

நேருவா மறைந்தார்; இல்லை!

நேர்மைக்குச் சாவே இல்லை!

அழிவில்லை முடிவுமில்லை

அன்புக்கு மரணம் இல்லை!

இருக்கின்றார் நேரு

இங்கேதான் இங்கேதான்

எம்முயிரில், இரத்தத்தில்,

இதயத்தில், நரம்புகளில்,

கண்ணில், செவியில்,

கைத்தலத்தில் இருக்கின்றார்

எங்கள் தலைவர்

எமைவிட்டுச் செல்வதில்லை!

என்றும் அவர் பெயரை

எம்முடனெ வைத்திருப்போம்

அம்மாஅம்மா….அம்மா…..!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 comments அக்டோபர் 15, 2006

Rose dance

roserose01.gif

2 comments செப்டம்பர் 17, 2006

பாட்டிற்காகவே மாண்ட நந்தி

மயானத்தில் சிதை அடுக்கி அதன்மீது அமர்ந்து நந்தி கேட்க வேண்டும் என்ற விதியின்படி மயானத்தில் அமைந்த சிதையின் மீதிருந்து நந்தி கேட்டு ரசித்தான். நூறு பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடும் போது, ஒவ்வொரு பந்தர் பற்றி எரிந்தது. நூறாம் பாடலை பாடும்போது, மயாத்துப் பந்தரும் பற்றி எரிந்தது.  நந்திவர்மன் உயிர் துறந்தான் என்பது வரலாறு.

இந்தக் கலம்பகத்தைக் கேட்பதற்காகவே நந்திவர்மன் உயிர் துறந்தானாம்.  இந்தக் கதை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பால் இது.

     ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

கையகம் அடைந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுரு மலராள் அரியிடம் சேர்ந்தாள்

செந்தழல் புகுந்ததுன் மேனி

யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம்?

எந்தையே நந்தி நாயகனே’! 

 

என்னார்

 

 

2 comments செப்டம்பர் 13, 2006

தாலாட்டு

தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே.

சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.

பச்சை இலுப்பை வெட்டி

பவளக்கால் தொட்டிலிட்டு

பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீயுறங்கு

கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ

சித்திரப் பூந்தொட்டிலிலே

சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ

சித்திரப் பூந் தொட்டிலிலே

இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.

உசந்த தலைப்பாவோ

‘உல்லாச வல்லவாட்டு’

நிறைந்த தலை வாசலிலே

வந்து நிற்பான் உன் மாமன்

தொட்டிலிட்ட நல்லம்மாள்

பட்டினியாப் போராண்டா

பட்டினியாய் போற மாமன்-உனக்கு

பரியம் கொண்டு வருவானோ?

தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப் போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும், தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபு,

பாமரர் தாலாட்டில் தொட்டில் செய்த தச்சனையும் காப்புச் செய்து தந்த தட்டானையும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களையும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ளது.

அது போலவே பூக்கொண்டுவரும் பண்டாரமும், போற்றுதலுக்கு உரியனாவான்,

தாலாட்டுகளில் உறவினர் முறையை உறுதிப்படுத்திக் கொள்ளும் சடங்கு அன்று ஒவ்வொருவரும் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகள் வரிசையாகக் கூறப்படும்,

 

 

பால் குடிக்கக் கிண்ணி,

பழந்திங்கச் சேணாடு

நெய் குடிக்கக் கிண்ணி,

முகம் பார்க்கக் கண்ணாடி

கொண்டைக்குக் குப்பி

கொண்டு வந்தான் தாய்மாமன்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்

சேனைக் கெல்லாம் அதிகாரியாம்

சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு

சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்

பல வர்ணச் சட்டைகளும்

பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு

கட்டிக் கிடக் கொடுத்தானோ!

பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு

மின்னோலைப் புஸ்தகமும்

கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே

கவிகளையும் கொடுத்தானோ !

வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).

இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும்.

எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும். வங்காளத்தில் “பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்¢பக்விட்டல்” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் ‘பாரோ மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.

மார்கழி மாசத்திலேதான்-கண்ணே நீ

மாராசாவைப் பார்க்கையிலே

தைப் பொங்கல் காலத்திலே-கண்ணே நீ

தயிரும், சோறும் திங்கையிலே

மாசி மாசக் கடைசியிலே-கண்ணே நீ

மாமன் வீடு போகையிலே

பங்குனி மாசத்திலே-கண்ணே நீ

பங்குச் சொத்தை வாங்கையிலே

சித்திரை மாசத் துவக்கத்திலே-கண்ணே நீ

சீர் வரிசை வாங்கையிலே,

வைகாசி மாசத்திலே-கண்ணே நீ

வயலைச் சுற்றிப் பார்க்கையிலே

ஆனி மாசக் கடைசியிலே-கண்ணே நீ

அடியெடுத்து வைக்கையிலே

அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே நீ

அரண்மனைக்குப் போகையிலே

ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ

அப்பன் வீடு தங்கையிலே

கார்த்திகை மாசத்திலும்-கண்ணே

கடவுளுக்குக் கையெடடி.

தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்.

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே

அம்புட்டுதாம் அப்பனுக்கு

வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி

விதம்விதமா அம்புட்டிச்சாம்,

அரண்மனைக்கு ஆயிரமாம்

ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி

அப்பன் விற்று வீடுவர

அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி

ஆச்சரியப் பட்டார்களாம்,

பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்

பிரியமாக ஆறெடுத்தேன்

அயலூரு சந்தையிலே-கண்ணே நான்

ஆறு மீனை விற்றுப் போட்டேன்.

அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை

அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.

அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்

அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு

அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்

அழகைப் பார்த்து அரண்டார்களே.

அத்திமரம் குத்தகையாம்

ஐந்துலட்சம் சம்பளமாம்

சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்

சர்க்கார் உத்தியோகமாம்

Sivaji

 

2 comments செப்டம்பர் 3, 2006

தேவரின் உறை

சக்தியின் சக்தி!

மாமேதை தேவரவர்கள் 1959 அக்டோபர் 10-ம் நாளன்று பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கொவில் 12-வது நவராத்திரி ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.

ஆயிரமாயிரமாய்த் திரண்டிருக்கும் தெய்வீச் சீலர்களே!

………..இன்று சக்தி என்னும் பொருள் பற்றி பேச வேணுமாயப் பெரியோர்கள் ஆக்று. ஆனால், பேசுதல் என்பது ஒன்றுக்கு உட்பட்ட பொருள் அல்ல. சக்தி என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. என்றாலும், பேசுதல், எழுதுதல், என்று வைத்திருக்கிறார்களே அது ஏன்? என்பதுதான் மனிதனுடைய அறிவிற்கு வேண்டுகிற ஒரு சர்ச்சை.

முடிவான ஒன்றை நாம் காண்பதற்கு, முடிவற்ற ஒவ்வொன்றை ஏணியாக வைத்து அறிவும் சரீரமும் ஏறுவது இயற்கை. சந்திரனை கேட்டுஅழுகின்ற குழந்தைக்கு சந்திரனை தர முடியாது என்பதை உணர்கின்ற பெரியோர்கள். அந்தக் குழந்தையடைய அழுகையை நிறுத்துவதற்காக கண்ணடியைக் காட்டி கண்ணாடியில் சந்திர பிரதிபிம்பத்தை விழச் செய்து. கண்ணுக்கு அங்கே தோன்றுகிற சந்திரனை இங்கே காணும்படியாகச் செய்து அழுகையை அமர்த்துவதைப் போல, பல லட்சம் மைலுக்கு அப்பால் இருக்கின்ற ஒன்றை ஒரு சில அக்குள்ளாக காட்டுவதற்கு கண்ணாடியை உபயோகப்படுத்துவதைப் போல, அதுசந்திரனை தந்துலவிடவில்லை. சந்திரன் உருவத்தைக் கண்டு கண்ட ஆசையை அதே உருவமாக கண்டு ஆசையை அமர்த்துவதற்கு உபகரணமாயிற்று. அதுபோல் முற்றும் துறந்த முனிவர்களும், ஞானிகளும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்ற இடத்தில் அவர்களுக்கும் அப்பால் நிற்கின்ற ஒரு சக்தியை சாதாரண ஜன்மங்களும்அறிவின் பெயரால் அந்த அளவு வாழிவதற்கு பிரயோசனப்பட வேண்டும் என்ற பக்குவத்திறகாக பெரியோர்கள் எழுத்தாக எழுதினார்கள். ஆனால், இதை அவை அடக்கமாக சொல்லுகிற முறையில் வித்வத் சம்பிரதாயமாக நான் சொல்லவில்லை. சாஸ்திரம் சொல்லுகிறது: “உரையாற்ற ஒன்றிற்கு உரையாணும் ஊமர்காள். கரையற்ற் ஒன்றிற்கு கரைகாணலாகுமோ, திறையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்கு, புரையற்று இருந்தான் புரிசடையோனேஎன்று குறிக்கின்றது சாஸ்திரம்.

இதே இடத்தில் ஒரு மலர் மாலையை நீங்கள் பார்க்கிறீர்கள். இது என்ன என்றால் முல்லைப்பூ என்று சொல்வதற்கு எல்லோருக்கும் தெரியும். இது எங்கே கிடைக்கிறது என்று கேட்டால் கடையில், எங்கே உற்பத்தி என்றால், நந்தவனத்தில், என்ன விலை என்றால், அதற்கு சரம் இன்னவிலை என்று பொருள், இத்தனையும் சொல்லுகின்ற நீங்கள் இதனடைய மணம் என்ன என்று கேட்டால் நல்ல வாசம் என்றுதான சொல்ல முடியுமே தவிர, முல்லையுடைய வசத்தை விவரமாக வாரத்தையால் சொல்ல முடியுமா? அதே போல் ஒரு ரோஜாப்பூ. ரோஜாவினுடைய நிறம், இதழ், விலை சொல்லலாம். அதனடைய வாசம்ட என்னவென்று கேட்டால் அதை சொல்வதற்கு வார்த்தை உண்டா? ஒரு ரோஜாவை நுகர்ந்து பார் என்று தான் சொல்லலாம். நிறத்தைச் சொல்லாம், உள்ளே விதை இருக்கும் என்பதை சொல்லாம், விலை சொல்லலாம், அதனுடைய ருசி என்ன என்றால் புளிப்பு என்று சொல்லலாம். புளிப்பு எப்படி இருக்கும்என்றால் சொல்வதற்கு வார்த்தை உண்டா? ஒரு பழத்தை நீ ருசித்துப்பார் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. இம்மாதிரி கேவலம் சாமான்யமான வாசகங்களுக்கும், சாமான்யமான வாசனைகளுக்கும், சாமான்யமான ருசிக்கும் சொல்வதற்கு வார்த்தை இல்லை என்கிற நிலைமையில், உலகத்தின் உணர்ச்சி இருக்கிற பொழுது உணர்வால் தெரிய வேண்டிய விஷயங்களை உரையால் புகுத்த வேண்டும் என்று காண்கிற்ற இடம் எவ்வளவு மேல்படி என்று நீங்களே உணர்ந்து கொள்ள வேண்டும்.

அம்மாதிரியான நிலையை அடைவதற்கு இம்மாதிரியான அடிப்படையை நாம் கையாள வேண்டியது மிக அவசியம். அதுபற்றித்தான் மகான்கள் இவைகளை கொண்டாடுகின்றார்கள் . உதாரணமாக எந்த காரியங்களும் மனிதனுடைய கண்ணுக்கு தோற்றுகின்ற வைகளையெல்லாம் சாதாரணமான நிலைமையில் இருக்கின்றவை. அறிவிற்கு தோன்றுகின்றவைகள்தான் மிக அசாதாரணமாக இருக்கின்றவைகளாகும்.. மேலெழுந்தவாரியாக பார்க்கின்றவைகள் எல்லாம் சாதாரணமான பார்ப்பதற்காக இருக்கின்றவைகள் எல்லாம் மிகச் சிரமப்பட்டு பார்ப்பதற்கு மறைந்து கிடக்கின்ற ஒன்று, அதே நிலைமையை வைத்துத்தான்,”முகத்தில் கண் கொண்டு பார்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்என்று சொன்னார்கள் பெரியோர்கள், ஆனால், எல்லோரும் இந்த முகத்தில் இருக்கின்ற கண்களால் பார்கின்ற பார்வையை வைத்து இதன் மூலம் கிடைக்கின்ற பேராசையைப் பெற்று பொருள் வடிவத்தையோ மற்றும் உள்ள இக்கால வடிவங்களையோ கைப்பற்றி அதன் மூலமமாக வாழலாம் என்கின்ற நிலைமையிலேயே வாழ்நாளை வீணாளாக்கி தங்களுடைய வாழ்க்கையை விருத்தாப்பியத்திற்கு ம் நோய்க்கும் ஆளாக்கிமரணத்தில் முடித்துக் கொள்வது தான் சகஜமாக இருக்கின்றது என்றாலும், அதைத் தாண்டுவதற்கு உரிய மார்க்கமும் அதற்கு அப்பால் செல்வதற்காக ஒன்று இருக்கின்றது என்பதையும் அங்கே பராசக்தியின் கிருபையால், மகான்கள் உதவியால் சட்டங்கள் வருக்கப்பட்டு, நீதி பண்ணி வைக்கப்ட்டிருக்கிறது.

முகக்கண் கொண்டு பார்ப்பதைத் தவிர வேறு எந்தக் கண்ணைக் கொண்டு பார்க்முடியும்? வேறு ஒரு கண் இருக்கிறதா சொல்கிறார்கள். அது மிகத் தவறு. அது கற்பனை; பிரயோசனமற்ற ஒன்று. இது வீணாக சொல்வதைத் தவிர மற்றது கிடையாது என்று சொல்லுகிற அளவுக்கு பிரச்சாரமாகி நிற்கின்ற நேரம்தான் இன்றைய நாஸ்திக காலம். ஆனால், அது உண்மையா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும்சாதாரண காலம் ஒன்றுண்டு. நித்திரை காலம் என்ற ஒன்றுண்டு. நித்திரை காலத்தில் கண்ணை மூடித்தூங்குவதைத் தவிர பெரும்பாலோர் கண்ணைத் திறந்து தூங்குவதில்லை. ஆனால், பாதி கண்ணைத் திறந்து தூங்குபவர்களும் உண்டு அப்படி சிறுபான்மையோபர், திறந்து தூங்குவோர்களுக்கும்கூட நித்திரை நேரத்தில் பார்வை இருக்காது; இருக்க முடியாது; காது கேளாது; மற்ற அவயவங்கள் வேலை செய்யாது. அதே நேரத்தில் சொப்பனம் என்பதைப் பார்க்கிறது. சொப்பனம் பார்க்கின்ற காலத்தில் நல்ல உருவங்களைக் கண்டு மகிழ்ச்சியும்,

மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கா வீதியில் நடைபெற்றது. திரு.பி.டி. ராஜன் தமிழ்ச்சங்க தலைவர் மற்றும் பொன்விழாக் குழு தலைவராக இருந்தார். 10 நாட்கள் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப் பட்டது

பொன்விழாவைத் துவக்கிற வைத்து மூதறிஞர் ராஜாஜி பேசினார். அவர் போசும் போது. 5000 வருடங்களக்கு முன் கலப்பில்லாத ஆரியன் இருந்தான். கலப்பில்லாத திராவிடன் இருந்தான். இப்போத ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி கலந்துவிட்டது. இப்போது சிலர் ஆரியன், திராவிடன் என்று பிரிவினை பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

4ஆம் நாள் நிகழ்ச்சியில் பேச வேண்டிய திரு. பி்டி ராஜன் தமதுவாய்ப்பை நிகழ்ச்சியில் இடம்பெறாத திரு. சி.என்.அண்ணாதுரைக்கு தந்து பேச வைத்தார். அவருக்கு முன்பாக சேலத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் மகள் மண்மேகலை என்னம் சிறுமி பேசினார். அண்ணாதுரை பேசும்போது.

இங்கே அருமையாகப் பேசிய மாணவிக்கு பரிசு என்ற பெயரில் ஒரு புத்தகத்தை கொடுத்து ஏமாற்றி அனுப்பிவிட்டார்கள். அந்தக் காலமாக இருந்திருந்தால். உமையம்மையின் ஞானப் பாலுண்டார் - ஞானம் வந்தது. பேசினார் என்று கதை கட்டியிருப்பார்கள்என்றார். மேலும் அவர் பேசும்போது, ” இந்த விழாவை துவக்கி வைத்துப் பேசிய ஆச்சாரியார் (ராஜாஜி) கூற்றை அப் படியே ஏற்றுக் கொண்டால் ஆச்சாரியாரின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறதுஎன்று ராஜாஜியின் பிறப்பை இழிவுபடுத்திக் குறிப்பிட்டார்.

இதைக் கேள்விப்பட்டார் தேவர். 6 ஆம் நாள் தேபதிகளின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பேச வேண்டியிருந்தது. 5ஆம் நாளே பேச அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கபட்பட்டது, ஆனாலும் பேசினார்.

மேடை மரபுகளை மீறி மேடையை ஆக்கிரமிப்பதும். ஒரு மாது தலைமையேற்றுள்ள போது பேசுவதும் அடியேனுக்கு இது தான் முதலும் கடைசியுமாகும். ராஜாஜிக்கும் எனக்கும்

ஆயிரம் கருத்த வேறுபாடுகள் இருக்கலாம். அவரது பிறப்பை, அவரது தாயை இழிவுபடுத்துகின்ற வகையில் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று பேசுவது பொறுத்தக் கொள்ள முடியாது. இருக்கின்ற இடம் அங்கயற்கண்ணியின் ஆலயம் என்பதையும் மறந்து தான் பெற்ற பட்டத்தை, படிப்பை மறந்து, தான் கொண்ட நாத்திகக் கொள்கையை மட்டும் மறவாமல் பேச வந்தவரைப் பேச விட்டது யார்? ஞானசம்பந்தர் வரலாற்றைக் கதை கட்டியதால் வந்தது என்று பேசலாமா? ஆலயத்தில் இந்த விழா நடப்பதை அனுமதிக்க முடியாது. என்று பேசினார் தேவர்

பசும்பொன்தேவர் அண்ணாவை சுடு சொல்லால் தாக்கினார் என்பது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு. தேவர் பயன்படுத்திய அதே சொல்லை அண்ணா , ராஜாஜியின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று நளினமாகச் சொல்லிவிட்டார். பசும்பொன் தேவர் யதார்த்த வாதி. பட்டென்று வெளிப்படையாச் சொல்லிவிட்டார்.

தமிழ்ச்சங்க நிர்வாகத்தில் இருந்தவர்கள் தன்னிச்சையாக கோவிலுக்குள் நடக்கும் விழா என்பதை மறந்து நிகழ்ச்சி நிரலில் இல்லாதவரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மேடையேற்றியதுதான் முதல் தவறு.

தேவரின் எச்சரிக்கையின்படி தமிழ்ச்சங்கம் பொன் விழாவின் மற்ற நிகழ்ச்சிகள் மீனாட்சியம்மன் கோவில் வடக்காடி வீதியில் இருந்து தமுக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.

மதுரை மணி

24-11-2001

பசும்பொன் தேவரும்

திராவிட இயக்கங்களும்

1 comment செப்டம்பர் 3, 2006

இரத்தினவேலு தேவர்

j0283930.gif

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.

இரத்தினவேல் தேவர், நகரமன்றத் தலைவராகப் பணியாற்றியபோது கம்பரசம் பேட்டையில் இருந்து நீரேற்று நிலையத்தை நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்பத்தி தனது சொந்த செலவில் விரிவாக்கம் செய்தார். அன்றைய மாகாண அரசின் நிதி இலாகா, தேவரின் செயலைக் கண்டித்து இவருக்குத் தாக்கீது அனுப்பியது. இதனை எதிர்த்து இலண்டன் பாராளுமன்றத்திற்குத் தேவர் முறையீடு செய்தார் லண்டன் பாராளுமன்றம் இவரது முயற்சியைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது. பத்திரிக்கைகளின் மூலம் இச்செய்தியினை அறிந்த மகாத்மாகாந்தி அடிகள் தேவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஜவஹர்லால் நேரு இவரது இல்லம் வந்து உணவருந்திப் பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், தேசியக் கல்லூரி நிரவாகக் குழுத் தலைவராகவும், இலங்கை தமிழர் யூனியன் கிரிக்கெட்குழுத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இரத்தினவேல் தேவர் சிறந்த கிரிக்கெட் வீரர். திருச்சிராப்பள்ளியில் கிரிக்கெட் குழு அக்காலத்திலேயே இலங்கை சென்று பெரும் புகழ்பெற்றது. நகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் பெரிதும் தீர்த்தவர் தேவர்.10-6-48 இவர் இயற்கை எய்தினார்.

இவரது பெயரில் தான் தேவர்ஹால் உள்ளது அந்த இடம் தேவருக்குச் சொந்தமாகும்

மாநகராட்சிஅலுவலகமம் உள்ள இடமும் இவருக்குச் சொந்தமானது

சிந்தாமனி விற்பனைக்கூடமும் இவருக்குச் சொந்தமானது

இலங்கை அமைச்சர் தொண்மைமான் இவருக்கு உறவினராவார்

பசும்பொன் தேவர் திருமகனாரும் இவரது இல்லத்தில் கொஞ்சநாள் இருந்தார்

காந்தியடிகள் தன் கையால் நூற்ற சேலை ஒன்றை இவருக்களித்தார்

இவருக்கு சிலை வைக்கத்தான் எந்த அரசும் ஒப்புதல் வழங்கவில்லை

இதுதான் கொடுமையிலும் கொடுமை அவர் திருச்சி நகருக்களித்த சொத்துகள் அதிகம் அப்படிப் பட்டவருக்கு சிலை வைக்க அரசு தடுமாறுவது தான் காரணம் தெரியாத ஒன்ற

Add comment மார்ச் 21, 2006

ந.மு.வேங்கடசாமி நாட்டார்

நாட்டார்

2-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாரு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.

கல்வி

அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்துவிட்டு தந்தையாரோடு சேர்ந்து வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நல்ல கல்விமானான தந்தையாரைத் தேடிவரும் அறிஞர்கள் பலரையும் மதித்துப் பழகிய இளைஞர் வேங்கடசாமி, தன் இல்லத்துக்கு வந்த சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய

. சாமிநாத முதலியாரால் ஈர்க்கப்பட்டு அவரின் தூண்டுதலால் ஆசிரியர்

துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல்

பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை

என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க்

கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.

இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும்

இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது.

இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற

விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு

எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.

பணி

தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய இவரின் திறமையைக் கேள்வியுற்ற அண்ணாமலை அரசர் தனியே

இருவரை அனுப்பி இவரை அழைத்துவரச் செய்து அண்ணா மலைப் பல்கலைக்

கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியமர்த்தினார்.ஏழாண்டுகளுக்குப் பின் அங்கிருந்து ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பியவர் .கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மதிப்புறு முதல்வராக ஊதியம் ஏதும் பெறாமல் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.

பாரதியின் சந்திப்பும் ஆக்கங்களும்

1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார்.

சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு

விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். ..ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ..ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

சிறந்த நூலாசிரி யராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள்

பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய வேளிர் வரலாறுஎன்ற நூலிலுள்ள

பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்ததுடன் வேளின் வரலாற்

றின் ஆராய்ச்சி என்ற நூலையும் 1915இல் எழுதினார். இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்ட நக்கீரர், ஆகிய நூல்களையும் முறையே 1919, 1921 ஆம் ஆண்டுகளில் எழுதினார். சமுதாய வரலாறாகக் கருதப் படும் கள்ளர் சரித்திரம் என்ற நூலை 1923இல் எழுதினார். அது கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகுமென்றும் கலாசாலை மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கத் தகுதி பெற்றது என்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. .மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன் ’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார். இதைத் தவிர கண்ணகி வரலாறும் - கற்பும் மாண்பும் (1924), சோழர் சரித்திரம் (1928) ஆகிய நூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, திருவிளையாடல் புராணம் ஆகியவற்றிற்கு இவர் எழுதிய உரைகளும் கற்றுணர்ந்த பெருமக்களின் பாராட்டைப் பெற்றன. அகத்தியர் தேவாரத் திரட்டு, தண்டியலங்காரப் பழைய உரை, யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றிற்குத் தென்னிந்திய சைவ

சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க உரைத்திருத் தங்களும் எழுதினார்.வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), ஆகியன நாட்டாரின் நூல்கள். கட்டுரைத் திரட்டு I என்ற நூலும்

வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார். இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார். .மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.

இவரின் பயிற்றுத் திறம் கேட்டு அண்ணாமலை அரசர் இவரை அழைத்துப்

பணியமர்த்தியது போல், இவரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை

மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவர்க்கு நாவலர்

எனும் பட்டத்தை வழங்கியது. நாட்டாரய்யா அவர்களின் சொற்பொழிவு என்பது

புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர்.

கனவு நனவானது

மேலும் தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே

தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த

பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் முயன்றார். அப்போது பல்வேறு

காரணங்களால் அது இயலாமல் போனது. 1980களில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம் நாட்டாரய்யாவின் கனவை நனவாக்கி உயர்ந்து நிற்கிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் நாவலர் கனவு கண்ட திருவருள் கல்லூரியையும் அதே பெயரில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ்க் கல்லூரியாக நிறுவி நடத்தி வருகிறார்கள்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே

பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே

அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.

ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட்

பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே

நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன்

வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று

கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக

உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக்

கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி

பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.

சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய

நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல்

நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச்

சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக்

கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச்

சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.

புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச்

சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும்.

கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல்

உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத

புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம்

தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக்

குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும்.

ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க

வேண்டுமென்பது நேர்மையாகாது.”

மணிவிழா

இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள்

செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக்

கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய

முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர்

கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.

நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு

செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். நாட்டாரய்யா அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தி (1984இல்) அவர்க்குச் சிலை

எடுக்க எடுத்த முயற்சிகள் தடங்கலும் தாமதமும் ஆகி, அவரின் பெயர்த்தி திருமதி

அங்கயற்கண்ணி செயதுங்கன் அவர்களைத் தலைவராகக் கொண்ட

அறக்கட்டளையினரால் (13.02.2005) அன்று நாட்டாரின் பெயரால் இயங்கும் கல்லூரி வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது.

ஆக்கங்கள் நாட்டுடமை

அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை

நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின்

குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே

தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, .நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை

ஆயின. 1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும்

22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள்

உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.

Add comment பெப்ரவரி 6, 2006

கோச்செங்கண்

கோச்செங்கணான் யார் – 3
இரா. கலைக்கோவன்

அத்தியாயம் 5
கோச்செங்கணான் சிவத்தொண்டரா வைணவ அடியாரா ?

‘செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட்கரு ணைபெரி தாயவனே
வெங்கண்விடை யாயெம் வெணாவலுளாய்
அங்கத்தயர் வாயினள் ஆயிழையே’ (64)

என்ற சம்பந்தரின் வரிகள் திருஆனைக்கா கோயிலை எடுப்பித்தவன் சோழன் கோச்செங்கணானே என்பதை எடுத்துரைக்கின்றன.

‘கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனை’ (65)

என்ற சுந்தரர் பாடல் மூலம் நன்னிலத்துப் பெருங்கோயிலை எழுப்பியதும் கோச்செங்கணானே என்றறிகிறோம்.

அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடப்பெறும் மாடக்கோயில்கள் அல்லது பெருந்திருக்கோயில்கள் பலவாகும். எழுபத்தெட்டு பெருந்திருக் கோயில்கள் இருந்ததாகப் பாடும் அப்பர் அடிகள் அவற்றைக் கட்டியவர் யாரென்று குறித்தாரில்லை. எத்தனையோ திருப்பதிகளைப் பாடிப்பரவிய சம்பந்தரும் திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், திருவைகன்மாடக்கோயில், திருவானைக்கோயில் போன்ற மிகச்சில கோயில்களையே கோச்செங்கணான் எடுப்பித்தவையாகக் குறிப்பிடுகின்றார். சுந்தரரோ நன்னிலத்துப் பெருங்கோயிலைப் பாடும்போது மட்டுமே, அக்கோயிலை எடுப்பித்ததாகக் கோச்செங்கணானைக் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் நோக்க, கோச்செங்கணான் கோயில்கள் எடுப்பித்தது உண்மையென்றும், அவை அதுவரை நடைமுறையில் இல்லாத புதியதோர் அமைப்பில் அமைக்கப் பட்டமையின், ‘மாடக்கோயில்கள்’ என்று வழங்கப்பட்டன என்பதும், அக்கோயில்கள் திருமாலுக்கும் சிவனுக்குமாய் எழுப்பப்பட்டன என்பதும் பெறப்படும்.

கோச்செங்கட்சோழன் வாழ்ந்த காலம் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் வலியோங்கிய காலமாகும். தமிழர் சமயங்களான சைவத்தையும் வைணவத்தையும் காக்கவேண்டிய பொறுப்பில் சோழமன்னன் இருந்தமையால், சோழர் தொல்குடிக்கே உரிய கலையார்வமும், பேராற்றலும், பெருமிதப்போக்கும் அப்பெருமானைத் திருமாலுக்கும் சிவனுக்குமாய் மாடக்கோயில்களை எழுப்பவைத்தன எனலாம். திருநறையூர் மாடக்கோயில், திருநாங்கூர் மாடக்கோயில், அழகிய மணவாளப்பெருமாள் கோயில் முதலிய பெருமாள் ஆலயங்கள் கோச்செங்கணானால் கட்டப்பட்டவையே.

சங்ககாலத்துக் கோயில்களின் அமைப்பு முறையிலிருந்து கோச்செங்கணான் கோயில் அமைப்பு முறைகள் மாறுபட்டன. இப்புதுமையான அமைப்புமுறையில் செய்யப்பட்ட கோயில்கள் மாடக்கோயில்கள் எனப்பட்டன. கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் அமைக்கப்பட்டது. (66) படிக்கட்டுகள் அமைத்துச் செய்குன்றுபோல் கட்டப்பட்டதால், இவை யானை ஏற முடியாத நிலையில் அமைக்கப்பட்டன என்ற கதை தோன்ற வாய்ப்பானது. மாடக்கோயில் என்பது கோயில் கட்டடக்கலை வளர்ச்சியில் ஒரு படி. ஆனால் பின்வந்தோர் அதற்கும் ஒரு சிலந்திக் கதையைச் சிறப்பாகவே செய்து வைத்தனர். செங்கணான் சிலந்திச் சோழன் என்றும் அழைக்கப்பட்டான். அப்பர் அடிகளும் திருஞானசம்பந்தரும் தங்கள் பதிகங்களில் பல இடங்களில் இச்சிலந்திக் கதையைக் குறிப்பிடுகிறார்கள். ஏனைய புராணக் கதைகளைப் போலவே இக்கதையும் வரலாற்று அடிப்படைகள் இல்லாத கதையாகும்.

இனி, கோச்செங்கணான் சிவனடியாரா அல்லது திருமால் அடியாரா என்பது பற்றிக் காண்போம்.

கோச்செங்கணானைச் சிவனடியாராக்கிய பெருமைக்குரியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்பெருமான் தம்முடைய திருத்தொண்டத்தொகையில்,

‘தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்’ (67)

என்று அடியார்களுள் ஒருவராகச் செங்கணானை வைத்துப் போற்றுகிறார். இத் திருத்தொண்டத்தொகையைப் பின்பற்றி எழுந்த திருத்தொண்டர் திருவந்தாதியில்,

‘மைவைத்த கண்டன் நெறியின்றி
மற்றோர் நெறி கருதாத்
தெய்வக் குடிச் சோழன்’ (68)

என்று நம்பியாண்டார் நம்பி இன்னும் ஒருபடி மேலே போய், கோச்செங்கணானைச் சைவம் தவிர வேறு சமயநெறி கருதாத் தொண்டனாக வரைந்து காட்டுகிறார்.

இவ்விரண்டு நூல்களையும் அடியொற்றி எழுந்த திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் கோச்செங்கணானின் சிலந்திக்கதையோடு, அம்மன்னன் பிறந்த கதை, அவன் பெற்றோர் பெயர்கள் முதலியவையும் கூறுகின்றார். கோச்செங்கணானின் தந்தையைச் சுபதேவர் என்றும் தாயார் கமலவதி என்றும், அப்பெருமாட்டி, த்ன் குழந்தை சிறிது நேரம் கழித்துப் பிறந்தால் உலகாளும் என்று சோதிடர்கள் கூறியதால் தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச்செய்து, பிள்ளைப்பிறப்பைத் தள்ளிப்போட்டதாகவும், காலங்கடந்து பிறந்தமையால் கண்கள் சிவந்திருக்கக் கண்ட தாய், ‘என் கோச்செங்கண்ணனோ’ என்று கேட்டதாகவும் சோழரின் பிறப்புக்கதை கூறப்படுகின்றது.

‘… … பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காதலோடும் பலவெடுக்கும் தொண்டு புரியும் கடம் பூண்டார்’ (69)

‘ஆனைக் காவிற் றாமுன்னம் அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்’ (70)

‘அந்தமில்சீர்ச் சோணாட்டில் அகனாடு தொறுமணியார்
சந்திரசே கரனமருந்தானங்கள் பலசமைத்தார்’ (71)

என்ற சேக்கிழாரின் வரிகள், கோச்செங்கட் சோழன் திருவானைக்கா கோயிலை எடுப்பித்த செய்தியையும், சிவபெருமானுக்காகப் பல கோயில்கள் எடுப்பித்தமையையும் தெரிவிக்கின்றன.

இக் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்திலிருந்து மூன்று முதன்மையான செய்திகள் பெறப்படுகின்றன. அவர் சுபதேவச் சோழருக்கும் கமலவதி தாயாருக்கும் பிறந்தவரென்பது ஒன்று. அவரது முற்பிறப்புச் சிலந்திக்கதை மற்றொன்று. அவர் திருவானைக்கா கோயிலையும் மற்றும் பல ஆலயங்களையும் எழுப்பியது மூன்றாவது செய்தி. இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

கோச்செங்கணானின் காலம் ஏறத்தாழ கி.பி. 400-600. சேக்கிழார் பெருமானின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு. ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தொண்டர் புராணத்தில்தான் கோச்செங்கணானின் பிறப்புக்கதை முதன்முதலாகச் சொல்லப்படுகிறது. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து, இச்சோழவேந்தனைப் பாடிய சம்பந்தர், அப்பர், திருமங்கையாழ்வார், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து இவ்வேந்தனைப் பாடிய சுந்தரர், அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி என்போர் கூறாத இப்பிறப்புக் கதை சேக்கிழார் பெருமானுக்கு எங்கிருந்து கிடைத்திருக்க முடியும்? கல்வெட்டுச் செய்திகளில் கூட கோச்செங்கணானைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைக் காணமுடியவில்லை. முன்னோர்களில் ஒருவனாக அப்பெருமான் அன்பில் செப்பேடுகளில் குறிக்கப்படுவதோடு சரி. கோச்செங்கணான் காலத்தில் கோயில்கள் மரத்தாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டமையால், அவன் காலத்துச் செய்திகள் கோயில்களில் அதிக அளவில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. வேறெந்த அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாத நிலையில் புதிதாக ஒரு பிறப்புக்கதை கற்பனையிலன்றி வேறு எங்கிருந்து தோன்றியிருக்க இயலும்!

ஒரு வாதத்திற்கு இக்கதை உண்மையென்றே கொள்வோமாயின், கோச்செங்கணான் சங்ககாலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் என்பதற்கு இக்கதையே தக்க சான்றாகிவிடும். சுபதேவர், கமலவதி என்ற பெயர்கள் முழுமையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன. சங்கச் சோழர்களின் பெயர்களோ, தூய தமிழ்ப் பெயர்கள். கிள்ளி, வளவன், சென்னி என்று அழகிய தமிழ்ப்பெயர்களுடன் வாழ்ந்த தமிழ் மன்னர்களிடையே சுபதேவன் திடீரென்று தோன்றியிருக்க முடியாது. வடமொழியாளர் கலப்பு மிகுதியும் தமிழகத்தில் தோன்றிய காலம் கி.பி. 300க்குப் பிறகே என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏறத்தாழ கி.பி. 400-600 க்குள் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பெயர் புனிதவதி என்பது இங்கு நினைக்கத்தக்கது. இப்படி வடமொழிப் பெயர்கள் சூட்டிக்கொள்வது பிற்காலத்துப் பழக்கமாய் மலர்ந்ததே தவிர, சங்க காலத்தில் இப்படி இருந்தமைக்குச் சங்க இலக்கியங்களில் போதிய சான்றுகள் இல்லை. (72) எனவே இக்கதையை உண்மையென்று ஏற்பின் அதுவும் கோச்செங்கணான் காலம் கி.பி 400-600க்கு இடைப்பட்டதென்பதை உறுதி செய்யும்.

அத்தியாயம் 6
இரு கண்கள்

இரண்டாவது, சோழனின் முற்பிறப்புச் சிலந்திக் கதை அப்பரும் சம்பந்தரும் பாடிய கதையைச் சேக்கிழார் பெருமானும் தொடர்ந்து பாடியிருக்கிறார். இதன் உண்மை பற்றி ஆய்வது தேவையற்றது. ஏனெனில், இதுபோன்ற புராணக் கதைகள் நம் நாட்டில் பல்லாற்றானும் பெருகியுள்ளன. இவை புலவர்களின் கற்பனையில் எழுந்தவை என்பதினும் வேறு சொல்வதற்கில்லை.

அப்படியே இந்தக் கதை நடந்ததாகக் கொண்டாலும், அது பொருந்துவதாக இல்லை. சிவபெருமானின் திருமுடிமீது அங்குள்ள கானல் மரங்களின் சருகுகள் உதிராமல் காக்கத் தன் வாய் நூலால் வலை பின்னிய சிவஞானச் சிலந்தி, சோழனாய்ப் பிறந்ததும் திருமாலுக்குக் கோயில்கள் எடுப்பித்தது எங்கனம்? ‘சிவபெருமானுக்கு எழுபது கோயில்கள் எடுத்ததாகத் திருமங்கையாழ்வாரே பாடியுள்ளார்’ என்கிறார்களே, அத்திருமங்கையாழ்வார் ஏனிந்த மன்னனின் சிலந்திக் கதையைச் சொல்லாம விட்டார்? சிவனுக்குக் கோயில்கள் எடுத்ததைப் பெருந்தன்மையுடன் சொன்னதாகச் சொல்லப்படும் ஆழ்வார் பெருமான் சிலந்திக் கதையை அது நடந்ததாக நினைத்திருப்பின் கூறாது விடார். சிவனைப் பழிக்கும் இடங்களில் கூட, சிவபெருமான் தொடர்பான புராணக் கதைகளை ஆழ்வார் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது. சிலந்திக்கதை உண்மையாக இருந்திருப்பின் தற்போது சில இடங்களில் சிலருக்கு முற்பிறப்பு நினைவு வந்ததாகச் செய்தியிதழ்களில் படிப்பதுபோல், கோச்செங்கணானுக்கும் முற்பிறப்புச் சிலந்தி வாழ்வு நினைவு வந்தது உண்மையாய் இருந்திருப்பின் அதைத் திருமங்கையாழ்வாரும் கூறியிருப்பார். ஏனென்றால், கோச்செங்கட்சோழனைப் பற்றிய பல வரலாற்று உண்மைகளைத் தரும் ஒரே புலவர் அவர்தாம். கோச்செங்கட்சோழன் வெற்றியைப் பாடிய களவழிகூட தராத செய்திகள் பலவற்றைப் பெரிய திருமொழியின் திருநறையூர்ப் பதிகம் தருகின்றது. இவற்றையெல்லாம் நோக்க, கோச்செங்கணானின் சிலந்திக்கதை, அப்பர் அடிகள், சம்பந்தர் காலத்தில் நாட்டில் வழங்கி வந்திருக்க வேண்டும்; அதை அடியவர்கள் வாயிலாகக் கேள்வியுற்ற அப்பெருமக்கள் தத்தம் பதிகங்களில் இணைத்திருக்க வேண்டும் என்று கொள்வதே பொருந்தும். திருமங்கையாழ்வார் கோச்செங்கணானைத் திருமால் அடியவனாகக் கண்டமையால் அவர் அக்கதையை ஏற்றாரில்லை.

சோழன் கோச்செங்கணான், திருவானைக்கோயில் முதலிய பல சிவாலயங்களை எழுப்பியது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும் மூன்றாவது செய்தி. கோச்செங்கணான் கோயில்கள் எழுப்பியதை முதன் முதல் தெரிவிக்கும் பெருமான் திருமங்கையாழ்வார்தாம். அப்பர் தம் அடைவுத் திருத்தாண்டகத்தில் சிவபெருமானுக்கென்று பெருந்திருக்கோயில்கள் எழுபத்தெட்டு இருந்ததாகக் குறிப்பினும் அவை யாரால் கட்டப்பட்டன என்று குறித்தாரில்லை. அதே காலத்தில் வாழ்ந்து கோச்செங்கணானைப் பாடிய சம்பந்தர், திருவைகல், திருவானைக்கா, திருஅம்பர், திருமுக்கீச்சரம் முதலிய கோயில்களைப் பாடும்போது அக்கோயில்களைச் செய்வித்தவன் கோச்செங்கணானே என்று பாடுகின்றாரே தவிர, கோச்செங்கணான் எழுபது மாடக்கோயில்கள் எடுப்பித்த பெருமிதச் செய்தியைக் குறிப்பாகவேனும் ஓரிடத்திலேனும் உணர்த்தினாரில்லை. திருநறையூர் மாடக்கோயிலைப் பாடிய திருமங்கையாழ்வாரோ இதற்கு மாறாக கோச்செங்கணானுக்கென்றே பத்துப் பாசுரங்கள், மொத்தம் நாற்பது வரிகள் பாடியுள்ளார். கோச்செங்கணான் சிவபக்தியுடைய அடியாராய் இருந்திருப்பானேயானால் அவனைத் திருமங்கையாழ்வார் இவ்வளவு கொண்டாடிப் பாடியிரார். பரமேச்சுர விண்ணகரத்தைப் பாடுகையில், பரம பாகவதனான பல்லவனைக் குறிக்கும்போதுகூட, பல வரலாற்றுச் செய்திகளை வரையாது வழங்கும் திருமங்கையாழ்வார், இவ்வளவு பெருமையுடன் போற்றவில்லை.

‘படைத்திறல் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே’ (73)

என்றுதான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிக்கின்றார். ஆனால் கோச்செங்கணானைப் பாடும்போது,

‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ (74)

என்று கோச்செங்கணான் சேர்ந்த கோயிலுக்கு அனைவரும் வந்து சேருங்கள் என்று பெருவிருப்போடு அழைக்கின்றார். இதை நோக்கும்போது, இப்பாசுரத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையவர்கள் செய்துள்ள விளக்கம் குறித்துப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் தம் ‘ஆழ்வார்கள் காலநிலை’ நூலில் குறிப்பிட்டிருப்பது எண்ணத்தகுந்தது. ‘சிவத்தொண்டினைச் சிறப்பப் புரிந்த இச்சோழன் முடிவில் திருநறையூர்த் திருமாலுக்கு அடியவனாய்ச் சிறப்புற்றான் என்று திருமங்கை மன்னன் பாசுரப் போக்குக்கு ஏற்பக் கருத்துரைப்பர் முன்னோர்’ (ஸ்ர் பெரியவாச்சான் பிள்ளை முதலியோர் வியாக்கியானம் காண்க. (75)

ஓர் கோயிலை எழுப்புவதென்பதே மிகக் கடினமான அதே சமயம், பெருமைக்குரிய செயலாகும். இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழமன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஒரே கோயிலால், தமிழகத்துக் கலைவரலாற்றில் அழியாத இடம் பெற்றார்கள். அப்படியிருக்க, எழுபது கோயில்களைக் காவிரியின் இருமருங்கிலும் ஒரு மன்னன் கட்டினான் என்றால் அது எத்தனை பெரிய செயல்! அத்தனை கோயில்களையும் அப்பெருவேந்தன் சிவபெருமானுக்கே எழுப்பி, அவனும் சைவநெறி ஒழுகியவனாக இருந்திருப்பின், சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் அதனைக் கொண்டாடியன்றோ பாடியிருப்பர்? கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்று சேக்கிழார் கூறுகிறார். ஆனால் இதைப்பற்றி அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோருள் எவரும் தில்லையைப் பற்றிப் பாடும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதைப்பற்றி முதன்முதல் குறிப்பு காட்டுபவர் நம்பியாண்டார் நம்பியே.

‘வம்பு மலர்த் தில்லை ஈசனைச்
சூழ மறைவளர்த்தான்’ (75)

இதையேதான் சேக்கிழார் பெருமானும்,

‘திருவார்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளம்களிப்பத் தொழுதேத்தி உறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்’ (76)

என்று கூறுகிறார்.

முதலில் சமணர்களாய் இருந்து பிறகு சைவர்களான மகேந்திரவர்மப் பல்லவன், பாண்டியன் நெடுமாறன் போல் இக்கோச்செங்கட்சோழனும் முதலில் சைவனாய் இருந்து பிறகு திருமால் அடியவனாக மாறியிருக்கலாம் என்று பெரியவாச்சான் பிள்ளையவர்களின் வியாக்கியானத்தை அடியொட்டி வாதிடலாம். என்றாலும், கோச்செங்கட்சோழன் சமயப் பொறையுடைய மன்னனாக இருந்தான் என்பதே பொருந்தும். சைவமும் வைணவமும் தன் இரு கண்களாய்க் கொண்டிருந்தமையால்தான் அப்பெருமானைச் சைவர்களும் போற்றினர். வைணவர்களும் வாழ்த்தினர். சமயப் பொறையுடன், நடுவுநிலைமை தவறாது, எல்லாச் சமயத்தினர்க்கும் உரியவனாய் நல்லாட்சி செய்து வாழ்ந்த இப்பெருமானை, ஒரு சமயத்துக்கு உரியவனாக்கி, ‘நாயன்மார்’களுள் ஒருவனாகச் செய்தமை, கோச்செங்கட்சோழன் மீது சைவர்களுக்கிருந்த அளவற்ற ஈடுபாட்டையும் அன்பையும் காட்டுவதே தவிர வேறில்லை. அவனைத் திருமால் அடியவனாக வைணவர்கள் பாராட்டுவதும் அதனாலேதான். இரு சமயத்தார்க்கும் இன்பமூட்டியவனாய் இரு கடவுளர்களையும் வணங்கி, ‘அரியும் சிவனும் ஒன்று’ என்ற உயரிய கொள்கைக்கு நிலைக்களனாய் வாழ்ந்தவன் கோச்செங்கணான்.

முடிவுரை

கோச்செங்கட்சோழன் தொடர்பான அனைத்து இலக்கியக் கல்வெட்டுச் செய்திகளை ஆராயுமிடத்து, கோச்செங்கட்சோழன் கி.பி. 400இல் இருந்து 600க்குள்ளாக இடைப்பட்டதொரு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டுமென்பதும், அப்பெருமான் அழுந்தை, வெண்ணி, கழுமலம் முதலிய இடங்களில் போரிட்டுப் பகையரசர்களை வென்றவன் என்பதும் அவனுடன் கழுமலத்தில் போரிட்ட சேரவேந்தன் போர்க்களத்தில் மடிந்துபட்டான் என்பதும், அக்கழுமல வெற்றியைக் குறித்துப் பாடப்பட்டதே பொய்கையாரின் களவழி நாற்பது என்பதும், செங்கணான் மாடக்கோயில்களைச் சிவபெருமானுக்கும் திருமாலுக்குமாய் எழுப்பி இரு சமயத்தையும் தன்னிரு கண்களெனப் போற்றி வாழ்ந்த பெருமன்னன் என்பதும் தெளிவாகக் காணக்கிடக்கின்றன.

(முற்றும்)

அடிக்குறிப்புக்கள் :

64. இரண்டாம் திருமுறை – தருமபுர ஆதீனப் பதிப்பு, திருவானைக்கா பதிகம், பக். 104
65. ஏழாம் திருமுறை – தருமபுர ஆதீனப் பதிப்பு, திருநன்னிலத்துப் பெருங்கோயில் பதிகம், பக். 798
66. தமிழகக் கோயிற் கலைகள் – டாக்டர். இரா. நாகசாமி, பக். 30
67. திருத்தொண்டத்தொகை (ஏழாம் திருமுறை), பக். 313
68. திருத்தொண்டர் திருவந்தாதி, குமரகுருபரன் சங்கப் பதிப்பு, பக். 362, செய்யுள் எண் 81
69. திருத்தொண்டர் புராணம் – திரு. C.K.சுப்பிரமணியனார் உரை, பக். 550
70. திருத்தொண்டர் புராணம் – திரு. C.K.சுப்பிரமணியனார் உரை, பக். 550
71. திருத்தொண்டர் புராணம் – திரு. C.K.சுப்பிரமணியனார் உரை, பக். 552
73. பெரிய திருமொழி – பரமேச்சுர விண்ணகரம், பக். 50, செய்யுள் எண் 8
74. பெரிய திருமொழி – திருநறையூர்ப் பதிகம்-3, பக்.144, செய்யுள் எண் 1
75. ஆழ்வார்கள் காலநிலை – மு.இராகவையங்கார், பக். 127
76. திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி, பக். 362, செய்யுள் எண் 82
77. திருத்தொண்டர் புராணம் – கோச்செங்கட்சோழ நாயனார் புராணம், செய்யுள். 4212.

திருச்சிராப்பள்ளி மலைகோட்டை

Add comment பெப்ரவரி 6, 2006


Categories

  • Blogroll

  • Feeds